Oplus_131072
மீனாட்சி அம்மன் கோவில் பல ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்களை அதனிடம் சேமித்துவைத்து வருகிறது.
மீனாட்சி பிறந்தபோது ஜோதிடர்கள் கூறியது போலவே அவளுக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும், அவள் பூமியிலுள்ள சகல மன்னர்களையும் ஜெயித்துவிட்டு கயிலைக்கு படையெடுத்தபோது, ஈஸ்வரனை கண்ட பின் மூன்றாம் மார்பு மறைந்து விட்டதென்றும் அன்றே அவன் மேல் காதலில் விழுந்தவளை அடைவதற்கே ஈஸ்வரன் சுந்தரேஸ்வரனாக வந்தார் என்று பேச்சு உண்டு.
மீனாட்சி கோவிலில் 33,000க்கும் அதிகமான சிற்பங்கள், 4500 தூண்கள், 14 கோபுரங்கள் உள்ளன; அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ளது நாம் அறிந்ததே.
மீனாட்சி கோவிலின் உள்ளே இருக்கும் ஒரு சுரங்க பாதை மூலம் திருமலை நாயர் அரண்மனையை அடையலாம் என்று ஒரு கதை உண்டு. அது கட்டுக்கதையாக இருக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். நான் ஒவ்வொரு முறை மீனாட்சி கோவிலுக்கு செல்லும் பொழுது இந்த அடைக்கப்பட்ட சுரங்க பாதையை ஒருமுறை எட்டிப்பார்த்து விட்டு தான் நகர்வேன் 😉
இங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரே பாறையில் இந்த மண்டபத்தை செதுக்கியுள்ளார்கள் – ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?!!
கடம்ப மரம்: முற்காலத்தில் மதுரை நகர் கடம்ப மரங்கள் சூழ தான் இருக்குமாம். ஆனால் இப்பொழுது எண்ணி 20 முதல் 30 மரங்கள் தான் இருக்கின்றதாம் மதுரையில். ஒவ்வொரு கோவிலுக்கும் ‘ஸ்தல விருக்ஷம்’ என்று அந்த கோவிலை சிறப்பிக்க ஒரு மரம் இருக்கும். மீனாட்சி கோவிலுக்கு இருப்பது, கடம்ப மரம். இன்று வரை அந்த கடம்ப மரத்தை கோவிலுக்குள் பாதுகாத்து வருகிறார்கள்.
சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ( முக்குறுணி விநாயகரை தரிசிக்கும் பாதை) பிரகாரத்தின் மேற்கூரையில் ஒரு லிங்க ஓவியம் வரையப்பட்டிருக்கும். அது தான் சுழலும் லிங்கம். எந்த திசையிலிருந்து அந்த லிங்கத்தை பார்த்தாலும் லிங்கத்தின் பீடம் நம்மை நோக்கி இருப்பது போலவே தெரியும். இது தான் சுழலும் லிங்கத்தின் மகிமை.
இங்கு 6*7 அடிக்கு ஒரு பெரிய விநாயகர் சிலை உள்ளது. அவர் தான் முக்குறுணி விநாயகர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி விநாயகருக்கு 18 கிலோ அரிசியில் பெரிய மோதகம் செய்து படைப்பர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் 5 இசை தூண்கள் இருக்கின்றன. இதே போல இசை எழுப்பும் தூண்கள் தமிழ்நாட்டில் சுசீந்திரம், திருப்பெருந்துறை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன.
நடராஜர் பொதுவாக வலது காலை தரையில் வைத்து தன்னுடைய இடது காலை தான் தூக்கி நிற்பது போல எல்லா கோவிலில் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் தான் மாற்றி நிற்பார். அதாவது இடது கால் தரையில் பட வலது காலை உயர்த்தி நிற்பார். இதற்கு காரணம், சிவ பக்தனான வரகுண பாண்டிய மன்னன் அவன் நடனம் பழகும் பொது அவனுக்கு ஏற்பட்ட கால் வலியை உணர்ந்து, இதுபோல் எந்நேரமும் ஆடும் ஈஸ்வரனுக்கும் வலிக்குமே என்று எண்ணி அவரிடம் கால் மாறி ஆடுமாறு வேண்டிக்கொண்டதால் என்றும் ஓர் கதை உண்டு.
அந்த வரகுண பாண்டியன் வேட்டையாடிவிட்டு திரும்பும் வழியில் ஓர் பிராமணரை அவனின் குதிரை தவறுதலாக மிதித்துக் கொன்றுவிட, அதனால் அவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை தீர்ப்பதற்காகவே சுந்தரேஸ்வரர் அவனை இந்தக்கோயிலுக்குள் கிழக்குகோபுர வழியாக உட்சென்று மேற்குக்கோபுர வாசல் வழியே வெளியேறுமாறு கூறியதாகவும், அன்று முதல் மன்னனுக்காகவே அந்த பிரம்மஹத்தி தோஷம் இன்னும் கிழக்குக்கோபுர வாசலிலேயே காத்திருப்பதாகவும் ஓர் தகவல். இதனாலேயே சகலரும் கிழக்குகோபுர வழியாக உட்சென்று மேற்குக்கோபுர வாசல் வழியே வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
உலகத்தின் அதியசங்களுக்கான புதிய பட்டியலில், பரிந்துரைக்கப்பட்ட 30 இடங்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று.
சமீபத்தில், இந்தியாவின் இரண்டாவது சுகாதாரமான இடம் என்ற பெருமையை ‘Swachh Iconic Place’ விருது மூலம் நம் மீனாட்சி அம்மன் கோவில் பெற்றிருக்கிறது.
அடுத்த முறை மதுரைக்கு வர நேர்ந்தால் கண்டிப்பாக மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு அப்படியே இந்த பட்டியலையும் ரசித்துவிட்டு வாருங்கள்.




