கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாணவர் அமுதன் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், கல்லூரி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பில் எந்தவித அலட்சியமும் இருக்கக் கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.




