தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளின் நலனில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களுக்கு விநியோகிக்கப்படும் முட்டை உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்து உணவுப் பொருட்களையும் தர ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறை மற்றும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.




