டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது இனி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குநர் நந்தகுமார் புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையின்படி, முதல் முறையாக கூடுதல் விலைக்கு மது விற்றது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் ஒரு மாதம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவார். அதே தவறை இரண்டாவது முறையாக செய்தால், மூன்று மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வசூலித்தது உறுதியானால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இதில் 60 சதவீத தொகையை சம்பந்தப்பட்ட விற்பனையாளர் செலுத்த வேண்டும். மீதமுள்ள 40 சதவீதத்தை அந்தக் கடையின் மேற்பார்வையாளர் ஏற்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மது விற்பனையில் முறைகேடுகளை தடுக்கவும், பொதுமக்களிடம் கூடுதல் தொகை வசூலிப்பதை முற்றிலும் கட்டுப்படுத்தவும் இந்த புதிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




