கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணிகளை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது, தங்களது தரப்பு கருத்துகளையும் கேட்காமல் எந்தவிதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் அரசு வேலைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட பணிகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தரப்பில் தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தீரன் திருமுருகன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்தகட்டமாக எந்த உத்தரவை பிறப்பிக்கும் முன்பும் மனுதாரர் தரப்பின் கருத்துகளை கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




