திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் வசித்து வந்த தனலட்சுமி (42), பனியன் நிறுவனத்தில் டைலராக பணியாற்றி வந்தார். இவரது மகள் பூவரசி (22), தனியார் பைக் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த அக்சயன் (27), கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பூவரசி – அக்சயன் இடையே 3 ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது.
பூவரசியை திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் அக்சயன் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 4 நாட்களுக்கு முன்பு பல்லடம் வந்த அக்சயன், விடுதியில் தங்கி தினமும் பூவரசியின் வீட்டிற்கு சென்று திருமணம் தொடர்பாக வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று பூவரசியின் வீட்டிற்கு சென்ற அக்சயன் மீண்டும் திருமணம் தொடர்பாக தகராறு செய்துள்ளார். தனலட்சுமி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர், அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த பூவரசியையும் வெட்டியுள்ளார்.
இதில் தனலட்சுமி மற்றும் பூவரசி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அக்சயனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அக்சயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




