இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் மற்றும் பான் கார்டு வைத்திருக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அடையாளத்தை அறிந்துகொள்வதற்கு ஆதார் அட்டையும், அதே நேரத்தில் வரி செலுத்துதல் மற்றும் வங்கி கணக்குகளுக்கு பான் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாக காணப்படுகிறது. ஒரு மனிதனின் அத்தனை விவரங்களும் ஆதார் மற்றும் பான் அட்டையில் கட்டாயம் இருக்கும். எனவே மோசடி செய்ய இந்த 2 ஆவணங்கள் மட்டும் இருந்தாலே போதும்.
தற்போது ஆதார் எண் அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் எண் அல்லது பான் எண் ஆகியவற்றை வேறு யாராவது கேட்பது போன்று தெரிந்தால், அவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
- உங்களுக்கு தெரியாத நபர்கள் ஆதார் மற்றும் பான் அட்டை குறித்த விவரங்களை கேட்டால், பகிர்ந்து கொள்ள கூடாது. ஒருவேளை கொடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் அதனை அவர்கள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
- ஆதார் மற்றும் பான் அட்டை நகல் எடுக்கும் தருவாயில் கவனமாக இருந்து மறக்காமல் மீண்டும் ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
- உங்களின் கணினி மற்றும் மொபைல் போன்களை தவிர வேறு எங்கும் ஆவணங்களின் டிஜிட்டல் நகலை வைத்திருக்க கூடாது.
- ஆதார் மற்றும் பான் அட்டைகளை கையில் எடுத்து செல்ல வேண்டாம். மாறாக ஸ்கேன் செய்யப்பட்ட நகலை மொபைல் போனில் வைத்துக்கொள்ளலாம்.
- மேலும், சிபில் ஸ்கோர் எவ்வளவு உள்ளது என்பதை அவ்வப்போது சார்பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.




