ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிற்கே பெற்றுக்கொள்வது இன்று பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இந்த நிலையில், டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தனிநபர் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆன்லைன் ஆர்டரை வழங்க வந்த டெலிவரி ஊழியர் ஒருவர், வீட்டின் கதவைத் திறந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, வீட்டில் இருந்த குடும்பத்தினர் உடனடியாக தலையிட்டு, டெலிவரி ஊழியரை வீட்டிற்குள் வர வேண்டாம் என எச்சரித்து, காரிடார் பகுதியில் நிற்குமாறு கூறியதாக வீடியோவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆன்லைன் டெலிவரி சேவைகளில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும், வைரலாகி வரும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள சம்பவம் மற்றும் அதில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ அல்லது சுயாதீனமாகவோ உறுதிப்படுத்தப்படவில்லை.




