தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு, அவையில் சுவாரசியமான உரையாடல்களையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதையடுத்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சண்முகம், “வழங்கப்படும் காரை இன்னோவா காராகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனப் பின்னால் இருக்கும் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இதைக் கேட்டு முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
இதேபோல், பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சபரி அயங்கரன் தனது கல்லூரிப் பருவ நினைவுகளை நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார். “கல்லூரி காலத்தில் வேலையும் இல்லாமல் சொந்தமாகக் காரும் இல்லாமல் இருந்ததால் எனக்குக் காதல் தோல்வி ஏற்பட்டது. ஆனால் இப்போது எனது தலைவர் எனக்கு வேலையை வழங்கியிருக்கிறார், முதலமைச்சர் காரையும் வழங்கியிருக்கிறார்” என அவர் தெரிவித்தார்.
தேனியிலிருந்து சென்னைக்கு ரயில் மற்றும் ஆட்டோவில் வந்து சென்ற தனது சிரமத்தை முதல்வரின் அறிவிப்பு முற்றிலும் போக்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறியது அவையில் இருந்த அனைவரையும் கவர்ந்தது.




