
ஓம் என்னும் மந்திரம் இந்து சமயத்தில் பிரணவ மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ‘அ’, ‘உ’, ‘ம்’ என்னும் எழுத்துக்களின் சேர்க்கை ஓம் என்னும் மந்திரத்தை குறிக்கும். அ என்பது படைத்தல் தெய்வமான பிரம்மாவையும், உ என்பது காத்தல் தெய்வமான விஷ்ணுவையும், ம் என்பது அழித்தல் தெய்வமான சிவனையும் குறிக்கும். இது பிரபஞ்சத்தின் முதல் ஒலியாகவும் அனைத்து மந்திரங்களுக்கும் ஆதாரமாகவும் சொல்லப்படுகிறது. ஓம் என்னும் மந்திரத்தை தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 108 முறை உச்சரித்து வந்தால் நமது மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் நீங்கி, நல்ல நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். மனம் ஒருநிலைப்படும். உடல் ,மனம் இரண்டும் சம நிலைக்கு வரும். ஆராவின் அளவு அதிகரிக்கும். மனித உயிர்களுக்கு சுவாசம் உயிர்நாடியாக இருப்பது போல இந்த பிரபஞ்சத்தின் உயிர்நாடியாக ஓம் என்னும் மந்திரம் இருப்பதாக நம்பப்படுகிறது.



