கர்நாடகாவில் கொட்டித்தீர்த்த மழையால் காவிரியில் வெள்ளம். கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வரத்து ஒரு லட்சத்து 500 கன அடியாக இருந்தது. இதில் காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடியும் பாசன வாய்க்காலில் 500 கன அடியும் திறக்கப்பட்டது. இந்த நீர் கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், வாங்கல், மாயனூர், குளித்தலை பகுதிகளில் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு பெருக்கெடுத்து செல்கிறது. இன்று காலை மாயனூருக்கு 98,934 கன அடி நீர் வந்தது. இதில் காவிரி ஆற்றில் 97,464 கன அடி நீரும், 4 பாசன வாய்க்கால்களில் 1470 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவேரி ஆறு கடல் போல் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. அதேசமயம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவிரி ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ புகைப்படம் எடுக்க கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




