Oplus_131072
சபரிமலை யாத்திரைக்கு செல்லும்போது தென்னம்பிள்ளையை எடுத்து செல்வது ஏன்?
சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?
இது கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் பல்வேறு சிறப்புகள் உண்டு. கார்த்திகை வந்தால் சபரிமலைக்கு மாலை போடும் பழக்கம் இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் யாத்திரையின்போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது எதற்காக? மற்றும் எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சபரிமலை யாத்திரைக்கு செல்லும்போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?
முதல்முறை தொடங்கி ஒவ்வொரு முறையும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் போதும், ஐயப்பமார்களுக்கு பலவிதமான மனமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஐயப்பமார்களுக்கு அவர்களுக்குள் இருக்கும் தீய குணங்கள் அகன்று நல்ல குணங்கள் துளிர்க்கும்.
ஐயப்பமார்கள் அவர்களிடமிருந்த அஞ்ஞானங்களை துறந்து மெய் ஞானத்தை அடைகிறார்கள். இதன் மூலம் அவர்களது பழைய பிறவியைத் துறந்து புனர் ஜென்மம் பெறுகின்றனர்.
தென்னையை நாம் மனித இனத்திற்கு இணையாகவே கருதுகின்றோம். அதனால் அதை தென்னம்பிள்ளை என்றே அழைக்கிறோம். மறுபிறவி எடுப்பதை குறிப்பதற்கே தென்னம்பிள்ளையை எடுத்துச்சென்று அங்கே நடுகிறோம். இதற்காக தான் சபரிமலை செல்லும் போது தென்னம்பிள்ளையை எடுத்து செல்கிறார்கள்.
தென்னம்பிள்ளையை யாரெல்லாம் நடலாம்?
சபரிமலையில் யார் வேண்டுமாணாலும் தென்னம்பிள்ளையை நட முடியாது. இதற்கு தொடர்ந்து 18 வருடம் மகர ஜோதி தரிசனம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு தரிசனம் செய்தவர்கள் மட்டுமே இந்த தென்னம்பிள்ளையை நட வேண்டும் என்பது ஐதீகம்.
எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன?
பேட்டை துள்ளல் என்பது, சுயநலமாக யோசிக்கும் எண்ணங்களை அறவே அகற்றுவதாகும். ஒவ்வொரு மனிதனும் ஜாதி, மதம், இனம் மற்றும் சமூக அந்தஸ்து இவற்றை அகற்றி, வண்ணம் பூசி நடனமாடி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வைபவமே பேட்டை துள்ளல். இங்கே வேட்டை பிரியரான சாஸ்தா, வேடவன் உருவத்தில் கிராத சாஸ்தாவாக அருள்பாலிக்கிறார்.
இந்த சாஸ்தா, காட்டில் உள்ள மிருகங்களை மட்டும் வேட்டையாடவில்லை. நம்மில் உள்ள மிருக குணத்தையும் வேட்டையாடி, நம்மில் உள்ள நான் என்ற உணர்வை அழித்து, நமக்குள் விழிப்புணர்வை புகுத்தி, நாம் எல்லோரும் சமம் என்று உணர வைத்து நம்மை நல்ல மனிதர்களாக மாற்றி அருள்கிறார்.




