இளம் சீடன் ஒருவன் புத்தரிடம் பல ஆண்டுகள் ஆன்மீக பயிற்சிகளை முடித்த பிறகு பொது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் ஆசிரமத்திலிருந்து வெளியே செல்ல தீர்மானித்திருந்தான். அதற்கு முன்பாக, புத்தருடைய வாழ்த்துக்களை பெறவும் ஆலோசனைகளையும் கேட்க விரும்பினான். “குருவே நான் பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்னை வாழ்த்துங்கள்” என வேண்டினான் சீடன் “
“சுயநலமின்றி சேவை செய்வாயாக” என வாழ்த்தினார் புத்தர்.
பிறகு சில ஆலோசனைகளை பெற விரும்பிய இளம் சீடன்
“பெண்களிடம் எப்படி அணுகுவது ?” என்று கேட்டான்.
அவர்களை பார்க்காதே ! இது தான் சுலபமான வழி” என்றார் புத்தர்.
“பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் போனால் என்ன செய்வது?” என வினாவினான் சீடன்.
” அப்படியானால் தொடாதே!”
என அறிவுறுத்தினார் புத்தர்.
“சில சந்தர்ப்பங்களில் பெண்ணை தொடுகிற நிலையும் ஏற்படுகிறது. ஒரு பெண் தெருவில் விழுந்து கிடந்தால் யாரும் அவளை கவனிக்காத இடமாக இருந்து விட்டால் அவளுக்கு உதவுவதற்காக தொட நேரிடுமேயானால் அப்போது என்ன செய்வது?” என மேலும் கேட்டான் சீடன் .
“அப்படியானால் விழிப்புடன் இரு” என்றார் புத்தர்.




