Oplus_16908288
தினம் ஒரு குட்டிக்கதை –
ஒரு வீட்டு வாசலில் யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்…
அம்மா… தாயே… ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா !
அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து பார்த்தாள் அங்கே வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த தனது ஐந்து வயது மகளை அழைத்து அவளது கைகளால் அரிசியை அள்ளி கொடுத்து யாசகனின் பாத்திரத்தில் இட சொன்னாள்.
பெற்று கொண்ட யாசகனும் பக்கத்து வீட்டுக்கு சென்று பிச்சை கேட்க.., அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு அவளது
கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.
காலங்கள் உருண்டோடின..
இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது.
இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர்களாகினர் அவரவர்கள்
தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன…
ஒரு நாள் அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்… அங்கே
அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது
மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.
உடனே அவள் இறைவனிடம் பதறிக் கதறியே முறையிட்டாள். இருவருமே ஒரே மாதிரி தானே தானம் செய்தோம்… எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம் ஏற்ற இறக்கம் என்று வாதிட்டாள்.
அதற்கு இறைவனோ…
முதலாமவளோ தனக்கு பிறகும் தன் குழந்தையும் இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தையின் கையில் அரிசியைக் கொடுத்து தானம் செய்ய சொன்னாள்.
ஆனால் நீயோ உன் கைகளால் எடுத்தால் அரிசி நிறையவே செலவாகும் என்ற எண்ணத்திலே
உன் குழந்தையின் கையால்,
எடுத்தே தானமிடச் செய்தாய்…
இருவரது செயலும் ஒன்றே..
எனினும் எண்ணங்களோ வெவ்வேறு என்றார்.
எனவே எந்த செயலை செய்தாலும் மேலான எண்ணங்களோடு
செய்யும் செயல்களே நம் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் ஆத்ம திருப்திக்கும் மனநிறைவான உணர்வுக்கும் வழி காட்டும்.
சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை விட பொது நலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை மேலானவை அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்தே நிற்கும்…!




