துறவியின் பெருமை எது ?
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்துவந்த பெருஞ்செல்வந்தர் தான் பட்டினத்தார்.
இவர் பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது இயற்பெயர் திருவெண்காடர்.
சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி. பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள்பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர்.
இவர் ஒரு துண்டை மட்டும் உடுப்பாக அணிந்து துறவியாகச் சுற்றி யாசகம் பெற்று வாழ்ந்தவர். பின்னர் அதையும் வெறுத்து ஊர்ப்புறத்திலே தங்கினார்.
‘என் மேல் அக்கறை உள்ள யாராவது என்னைத் தேடி வந்து உணவு அளித்தால் மட்டுமே உண்பேன்’ என்னும் உறுதிகொண்டிருந்தார்.
ஒரு முறை அந்நாட்டை ஆட்சி செய்த சோழ மன்னன் அவரை சந்திக்க வந்தார்.
அரசன், அவரிடம்”நீங்கள் பெரிய செல்வந்தர் . அதை விடுத்து துறவறம் பூண்டது ஏன்? என்று கேட்டார்.
‘பளிச்’ என்று பதில் வந்தது. “இது என் தேர்வு.” என்று
மன்னன் அடுத்த கேள்வியை முன்வைத்தார். “நீங்கள் செல்வந்தராக இருந்ததற்கும், இப்போது துறவியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டார்.
அதற்குப் பட்டினத்தார், “துறவு பூண்ட நான் உன்னிடம் அமர்ந்து கொண்டே பேசுகிறேன். மன்னனாகிய நீ என்னிடம் நின்று கேட்கிறாய். இதுதான் வித்தியாசம்.
வணிகனாக இருந்தால் நான் மன்னனை வணங்க வேண்டும். ஆனால், நான் இறைவனை மட்டும் வணங்கினால் போதும், மன்னன் ஆசைக்கு அகப்பட்டவன், ஆண்டவனுக்கு ஆட்பட்டவன்,” என்று விளக்கம் அளிக்க, மன்னன் பட்டினத்தாரை வணங்கி அங்கிருந்து விடை பெற்றார்.




