பெண்களுடைய உயிர் மொத்தமும் அவர்களது தங்க நகைப் பெட்டிக்குள் இருக்கிறது என்ற உளவியல் புரியாத கணவர்களால் தான் பல குடும்பங்கள் இன்று திண்டாட்டத்தில் நிற்கிறது.
வீட்டுக்கு ஒரு தேவை, வருமானத்தில் ஒரு முடக்கம் என்றால் வீட்டுப்பெண்கள் வைத்திருக்கும் நகைப்பெட்டி தான் ஆண்களது இறுதிகட்ட நம்பிக்கை என்ற உளவியல் புரியாத மனைவிகளால் தான் மேலும் சில குடும்பங்கள் நூல்பிரிந்து நிற்கிறது.
அதாவது, மனைவியுடைய மனதை உடைக்க விரும்பாத அல்லது மனைவியை மன உளைச்சலுக்கு ஆளாக்க விரும்பாத மாத்திரமல்ல சின்னிச்சின்ன முடைகளுக்கெல்லாம் விலைபெற்ற தங்கத்தை அடகு வைப்பதும், மீட்க முடியாமல் தவிப்பதும், ஒருவேளை அதை விற்றுவிட்டால் பின் எப்பவுமே அதேபோல ஒன்றை வாங்கித்தரமுடியாமல் போகலாம் என்ற மனப்பக்குவம் கொண்ட ஆண் ஒருபோதும் நகைகள் மீது கை வைப்பதில்லை.
சிலர் பெண்களை விட வெகு ஆர்வமாக தங்க நகை வாங்குவதை காணமுடியும், அவர்களை பொருத்தவரை அது பின்னும் பொறகும் குடும்பத்திற்காக உதவப்போகிற திடமான முதலீடு என்பதால். பெண்களிலும் சிலர் உண்டு. அவர்களுக்கு நகைகள் மீது பெரிய ஆர்வமெல்லாம் எதுவும் இருக்காது. பெயருக்காக ஒன்றிரண்டு வைத்துக் கொள்வார்கள். நல்ல நாளுக்கோ அல்லது குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி என்றாலோ சக குடும்பத்து பெண்கள் மத்தியில் தன்னிடம் ரெண்டு நகை இருக்கிறது என காண்பித்துக்கொள்ள அல்ல, தன் கணவர் தன்னை நன்றாகத்தான் வைத்திருக்கிறார் என பிறருக்கு குறிப்பால் உணர்த்த.
அப்படியானவர்கள் கணவருக்கு ஏற்படும் முடக்கமானது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்க போகிறது என உணர்ந்து தாங்களாகவே கழற்றி கொண்டு வந்து கணவர் கையில் ஒப்படைத்துவிடுவார்கள். அது திரும்ப வீட்டுக்கு வரப்போவதில்லை என தெரிந்தே.
இரு தரப்பிலும் யோசித்து நடந்துகொண்டால் நகை போன்ற அற்பமான விஷயங்களுக்கெல்லாம் உறவினை இழக்கத் தயாராகும் கணவன்-மனைவி இல்லாமல் போவார்கள். கணவனோ மனைவியோ இவர் நமக்காக செய்த தியாகங்கள் என்ன? விட்டுக்கொடுப்புகள் என்ன? என்பன போன்ற காரணகாரியங்களை மனதில் அலசிப்பார்த்துவிட்டாலே நமக்கு எது முக்கியம் என்பது புலப்பட்டுவிடும்.




