Oplus_131072
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 17-ஆம் நாள் வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கும் விதமாக இந்தியாவில் தேசிய வலிப்பு நோய் நாள் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு என்பது ஒரு நீடித்த மூளைக் கோளாறு. இதனால் அடிக்கடி கால் மற்றும் கைகளில் வலிப்பு ஏற்படும். மூளை செல்கள் மற்றும் மூளை நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்புகளின் விளைவாகவே வலிப்பு நோய் உண்டாகிறது. இது அனைத்து வயதினருக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
வலிப்பு வந்தவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள். சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட் போன்றவற்றைத் தளர்த்தி நன்கு சுவாசிப்பதற்கு வழி செய்யுங்கள். அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள். வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம். வலிப்பு நோய் உள்ளவர்கள், இயந்திரங்களில் பணிபுரிவது, உயரமான இடங்களில் வேலை செய்வது, நீச்சலடிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வாகனங்களை ஓட்டக்கூடாது. தொடர்ச்சியாக அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது.
வலிப்பு உள்ள குழந்தைகளைக் குளம், கிணறு, அருவிகளில் குளிக்கவும், விளையாடவும்
அனுமதிக்காதீர்கள். வலிப்பு வந்தவர்கள் மது அருந்தக்கூடாது; புகை பிடிக்கக்கூடாது.வலிப்பு மாத்திரைகளை விட்டுவிட்டு சாப்பிடக்கூடாது. ஒரு வேளைக்குச் சாப்பிட மறந்தாலும், அது நினைவுக்கு வந்ததும் விட்டுப்போன மாத்திரையைச் சாப்பிட்டு விட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது.



