Oplus_131072
சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டால் கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீரில் இரத்தம் வருதல் போன்ற தாங்க முடியாத அறிகுறிகள் தோன்றும்.
இதற்கு அறுவை சிகிச்சைதான் இறுதி வழி என்றிருக்கும் நிலையில், பீர்க்கங்காய் கொடியை அரைத்துப் பசுவின் பால் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், மூன்றே முதல் ஏழு நாட்களுக்குள் சிறிய கற்கள் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும் என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரம்பரிய நாட்டு வைத்திய முறைகள் மற்றும் ஆயுர்வேத நூல்களின்படி, பீர்க்கங்காய் தாவரத்தின் வேர், தண்டு, இலைகள் மற்றும் கொடிகள் மருத்துவக் குணம் வாய்ந்தவை என்பது உண்மைதான். ஆயுர்வேதம் இதனை ஒரு ‘சிறுநீர்ப்பெருக்கி’ (Diuretic) என்று அழைக்கிறது.
பீர்க்கங்காய் கொடியின் சிறுநீர்ப்பெருக்கி பண்பானது, உடலில் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களையும், மிகச் சிறிய மணல் போன்ற கற்களையும் (Micro-stones) அடித்துக்கொண்டு வெளியேற்ற உதவக்கூடும்.
சில ஆயுர்வேத முறைகளில் இதன் வேர் அல்லது கொடியைப் பாலுடன் பயன்படுத்துவது பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், இது 3 முதல் 5 மில்லி மீட்டருக்கும் குறைவான மிகச் சிறிய கற்களுக்கு மட்டுமே தற்காலிகமாகப் பலன் தரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெரிய அளவிலான கற்கள் (Large Stones) சிறுநீரகப் பாதையை அடைத்திருக்கும் போது, இத்தகைய வைத்தியங்களை சுயசார்பாக மேற்கொள்வது வலியை அதிகரிக்கலாமே தவிரக் கற்களை முழுமையாகக் கரைக்காது.
எனவே, சமூக வலைத்தள வதந்திகளை மட்டும் நம்பாமல், தகுந்த மருத்துவரின் பரிசோதனை மற்றும் ஸ்கேன் (Scan) அறிக்கையின் அடிப்படையிலேயே எதையும் உட்கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.




