மனைவி ஊருக்குப் போயிருந்த போது ஒருவர் எழுதிய கவிதை…
“தவிப்பு..”
வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வாரம் தாய் வீடு போகிறாய்…
நீயும் பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு…
காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..
வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது…
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..
இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்…
முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி…
தண்ணீர்…
மோட்டார்…
டி வி போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்…
கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே வெளியில் கிளம்பி விடுகிறேன்..
தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை…
இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்…
இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே…
நான் ஜாலியாக இருக்கிறேன்…
என்று…
அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் சமர்ப்பணம் √




