கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்து, அவற்றை மார்பிங் செய்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாக எழுந்த புகாரில், 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மாணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.




