Oplus_131072
யாரெல்லாம் மறுபிறப்பை அடைவார்கள்…
ஒரு சீடன் குருவிடம், யார் யாரெல்லாம் மறுபிறப்பை அடைவார்கள் என்று கேட்டான்.
சீடனை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார் குரு. அங்கே குயவன் ஒருவன் பானைகளை வெயிலில் காய வைப்பதற்காக பரப்பி வைத்திருந்தான். சிறிது நேரத்திற்கு முன்பு எங்கிருந்தோ வந்த சில மாடுகள் அங்கிருந்த பானைகள்மீது நடந்து சென்றது. இதனால் பல பானைகள் உடைந்துவிட்டன. விற்பனைக்காக வைத்திருந்த சில சுட்ட பானைகளையும் அது உடைத்துவிட்டது.
அப்போது அங்கே வந்த குயவன் இதைக்கண்டு மிகவும் வருத்தமுற்றான். காய வைத்திருந்த பானைகளை ஒன்று சேர்த்து தண்ணீர் தெளித்து. பிசைந்து மறுபடியும் பானை செய்ய தயாரானான். உடைந்துபோன விற்பனைக்காக வைத்திருந்த சுட்ட பானைகளை தூர எறிந்துவிட்டான்
குரு இவைகளைக்காட்டி சீடனிடம் பேசினார். சுட்ட பானைகள் இறைக்காட்சி பெற்ற, ஞானம் பெற்றவனைக் குறிக்கிறது. சுடாத பானைகள் ஞானம் பெறாதவனைக் குறிக்கிறது. பச்சை மண் பானைகள் எத்தனை முறை உடைந்தாலும் குயவன் அதை தூர எறிவதில்லை. மீண்டும் மீண்டும் அதை சக்கரத்தில் ஏற்றி பானைகள் செய்வதற்கு பயன்படுத்துவான். அதேபோல ஞானம் பெறாதவன் இறந்தாலும் மீண்டும் மீண்டும் பிறக்கிறான். புதிய உடல்களை எடுக்கிறான். சுட்ட பானைகளை மீண்டும் பயன்படுத்த முடியாததுபோல, ஞானம் பெற்றவன் இறந்துபோனாலும் அவன் மறுபடி பிறப்பதில்லை என்று குரு கூறினார்
இன்னொன்று…
ஜனார்த்தன பந்த் என்பவரை குருவாக ஏற்ற ஏகநாதர், அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இருந்தும் இறைக்காட்சி கிடைக்கவில்லை. ஒரு சமயம், இறை சேவையில் அவருக்கு சற்றே அலுப்பு தோன்றியது . அதை குருவும் கவனித்தார். ஒருமுறை அங்குள்ள வரவு செலவு கணக்கில் ஒரு காசு குறைந்தது. தவறைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏகநாதரிடம் ஒப்படைத்தார் குரு.
–
ஏகநாதர் பலமுறை கணக்குகளை சோதித்து பாரத்தும் விடை காணமுடியாமல் அவதிப்பட்டார். கடைசியில் தூக்கத்தையும் மறந்து கணக்கினை சரிபார்த்து, மறுநாள் அதிகாலைப் பொழுதில் கணக்கில் உள்ள தவறைக் கண்டுபிடித்தார். உடனே அவரது மனம் மகிழ்ச்சியில் மிதந்தது. குருவிடம் சென்று தெரிவித்தார்.
அனைத்தையும் கேட்ட குரு, சொன்னார். மனதை ஒருமுகப்படுத்தி, பசி, தூக்கம் மறந்து இவ்வளவு நேரம் கணக்குப் பார்க்க வேண்டியிருந்த போதும், கணக்கில் இருந்த பிழையைக் கண்டுபிடித்ததும், கஷ்டத்தை மறந்து எவ்வளவு சந்தோஷப்படுகிறாய்? அப்படியானால் இறைவனைக் கண்டு கொண்ட பின்னர் அடையும் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பார், அப்போது கடவுளை அறிவதற்காக நீ படும் சங்கடங்கள் பெரிதாகத் தோன்றாது என்றார்.
குரு சொன்னதைக் கேட்ட ஏகநாதர், உண்மை உணர்ந்தார். பொறுமையும், விடாமுயற்சியும், மனஒருமைப்பாடும் எப்போதும் தேவை என்பதை புரிந்துகொண்டார்.




