சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கஸ்பாபுரம் பகுதியில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவி எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்த யமுனா (19), அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், இன்று தனது வீட்டில் வழக்கமான சுத்தம் செய்யும் பணிகளில் மாணவி ஈடுபட்டிருந்தார். அப்போது, வீட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட யமுனா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




