Oplus_131072
ஒரு ரயிலை தயாரிக்க உண்மையில் எவ்வளவு செலவாகும் என்று உங்களுக்கு தெரியுமா?. அதுபற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறோம்.
பொதுவாக, ரயில் பயணம் என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இயற்கை, மலைகள் உள்ளிட்டவற்றை பார்த்துக் கொண்டு பயணிக்கும் அனுபவம் சிறந்ததாக இருக்கும். இதனால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இதுதவிர, ரயில் பயணம் மிக வசதியாக இருக்கும். அதனால் தான் அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்திற்கு ரயிலை தேர்வு செய்கிறார்கள்.
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். நாட்டில், நாள்தோறும் சுமார் 40 மில்லியன் மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ரயில் சேவையில் பல்வேறு முன்னேற்றங்களை இந்திய ரயில்வே செய்து வருகிறது. ஆனால், எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. ஒரு ரயிலை தயாரிக்க உண்மையில் எவ்வளவு செலவாகும் என்று. அதுபற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறோம்.
ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் நாடு முழுவதும் உள்ள இந்திய ரயில்வேயின் பல்வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், ஒரு பெட்டியை தயாரிக்க எவ்வளவு செலவாகும்? என்று தற்போது பார்ப்போம்.
ஒரு ரயிலில் பல வகையான பெட்டிகள் உள்ளன. அதாவது, ஜெனரல் கோச், ஸ்லீப்பர் கோச் மற்றும் ஏசி கோச் ஆகிய பெட்டிகள் இடம்பெறுகின்றன. இந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பில் எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இதில், ரயில் பெட்டியின் வெளிப்புற பகுதியில் துருப்பிடிக்காத எஃகு மற்றும் உள் பகுதி அலுமினியத்தால் செய்யப்படுகிறது.
அறிக்கையின்படி, ஒரு ஏசி பெட்டியை உருவாக்க ரூ.2.8 முதல் ரூ.3 கோடி வரை செலவாகும். அதேபோல், ஒரு ஸ்லீப்பர் பெட்டியை உருவாக்க சுமார் ரூ.1.25 கோடி செலவாகும். அதே நேரத்தில், ஒரு பொது பெட்டியை உருவாக்க சுமார் ரூ.1 கோடி வரை செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
24 பெட்டிகள் கொண்ட ரயிலுக்கு சராசரியாக ரூ.60 முதல் 70 கோடி வரை செலவாகிறது. இதுதவிர, உள்ளூர், ராஜ்தானி மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்களின் கட்டுமான செலவு மாறுபடும். வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயிலின் விலை சுமார் ரூ.110 முதல் 120 கோடி வரை இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.




