சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் பிரபல ரவுடி தமிழ் அழகை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக தனிப்படை போலீசார் தமிழ் அழகை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென தலைமைக் காவலரை கையில் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தமிழ் அழகின் வலது கணுக்காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




