உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தின் கல்பி பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்ட இளம்பெண், தனது காதலரைத் திருமணம் செய்து கொண்டதாகவும், யாரும் தன்னை கடத்தவில்லை என்றும் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலோன் பகுதியைச் சேர்ந்த காஜல் மன்சூரி என்ற இளம்பெண் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கடத்தப்பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், காஜல் மன்சூரி, ஓம் சிங் என்ற இளைஞருடன் திருமணக் கோலத்தில் இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், “என்னை யாரும் கடத்தவில்லை; என் விருப்பத்தில்தான் ஓம் சிங்குடன் வந்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோர் மற்றும் உறவினர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய இந்த தம்பதியினர், போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இளம்பெண்ணின் பாதுகாப்பு, திருமணத்தின் சூழ்நிலை மற்றும் வழக்கின் உண்மை நிலை குறித்து ஜாலோன் மாவட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




