தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, ஜூலை 15 முதல் 21 வரை மாநிலம் முழுவதும் தீவிர குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு சோதனையின் போது 31,005 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட 2,906 பிணையில் வெளிவர முடியாத (Non-Bailable) பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், பிணையில் வெளிவந்தவர்கள் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினால், அவர்களின் பிணையை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தவும் மாநிலம் முழுவதும் இதுபோன்ற தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




