வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று (ஆகஸ்ட் 14) 505 பேருந்துகளும், நாளை 570 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலை, ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களுக்கு 380 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற நகரங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும், விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை பயணிகள் சென்னைக்கு உள்ளிட்ட தங்களது பணியிடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக 465 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.




