Attukal Soup | மூட்டு, கை, கால் வலிக்கு உடனடி நிவாரணம்..!!

பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஓன்று தான் சூப். சூப் எனக் கூறும் போது பல வகைகள் உள்ளன.

சூப் என்பது வெறும் காய்கறிகளையும், கீரைகளையும் போட்டு செய்வது மட்டுமல்ல. நமக்கு விருப்பமான இறைச்சி வகைகளையும் சேர்த்து செய்யலாம்.

இப்படி இறைச்சி வகைகள் சேர்க்கும் பொழுது சுவையும் அள்ளும், உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் சூப்பில் கிடைக்கும்.

காய்கறிகள், கீரைகள், இறைச்சிகள் அதனுடன் நீரை சேர்த்து சுவைக்காக ஒருசில மசாலாக்களை போடும் போது அந்த நீர் சத்தான சூப்பாக மாறுகின்றது.

அந்த வகையில், சூப்புகளில் ஆட்டு காலை கொண்டு செய்யப்படும் ஆட்டு கால் சூப் மிகவும் பிரபலமானது.

பழங்காலம் முதல் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஆட்டு கால் சூப் மருந்தாக பயன்படுகின்றது.

உதாரணமாக, நல்ல காரசாரமான ஆட்டு கால் சூப்பை குடித்தால் சளி மற்றும் காய்ச்சல் சரியாகி விடும், எலும்பு தொடர்பான பிரச்சினையில் இருப்பவர்கள் ஆட்டு கால் சூப் செய்து குடிப்பார்கள்.

இது போன்று அடிக்கடி ஆட்டு கால் சூப்பை குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பொதுவாக மனித உடலை நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு நோயெதிர்ப்பு சக்தி அவசியமாக பார்க்கப்படுகின்றது. இந்த நோயெதிர்ப்பு மண்டலம் வலுவில்லாமல் இருக்கும் பொழுது நாள்பட்ட நோய் நிலைமைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் பொழுது ஆட்டு கால் சூப் செய்து குடிக்கலாம். இது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதை தடுத்து மோசமான நோய்த்தொற்றுகளிலிருந்து எம்மை பாதுகாக்கிறது.

ஆட்டு கால் சூப்பில் “அர்ஜினைன்” என்னும் பொருள் உள்ளது. இது தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றது. எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்க விரும்பினால் ஆட்டு கால் சூப் செய்து அடிக்கடி குடிக்கலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

2.  எலும்புகளை வலுப்படுத்தலாம்

ஆட்டு கால் சூப்பில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆட்டு காலில் கால்சியம், காப்பர், போரான், மாங்கனீசு மற்றும் புற கனிமச்சத்துக்கள் உள்ளன.

இவ்வளவு சத்துக்கள் கொண்ட ஆட்டுகால் சூப்பை அடிக்கடி குடித்து வந்தால் எலும்புகள் வலுவாக்கப்படும்.

ஆட்டு கால் சூப்பில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற அத்தியாவசியமான வைட்டமின்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. இது எலும்புகளின் வளர்ச்சியையும், வலிமையையும் அதிகரிக்க செய்யும்.

3. உடல் சுத்தம் பேணப்படும்

பொதுவாக மனித உடலில் ஏகப்பட்ட நச்சுக்கள் உணவு வழியாகவும், வேறு வழிகள் மூலமாகவும் உடலுக்குள் செல்கின்றன. இவ்வாறு நச்சுக்கள் உடலில் அதிகம் சேர்ந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும்.

நமது உடலில் இருக்கும் நச்சுக்களை நிணநீர் அமைப்பு சிறப்பாக வெளியேற்றினாலும், ஒரு சில நச்சுகள் அவ்வளவு எளிதில் நம்மை விட்டு போகாது.

வெளியேறாமல் ஒரு இடத்தில் நச்சுக்கள் சேரும் பொழுது அதனை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். இப்படியான சமயங்களில் ஆட்டு கால் சூப் செய்து குடிக்கலாம். இது நச்சுக்களை வெளியேற்றி உடலை நீரேற்றத்துடன் வைக்கும்.

4. அமினோ அமிலம் அதிகமாகும்

ஆட்டு கால் சூப்பில் சிஸ்டைன், அர்ஜினைன், குளுட்டமைன், புரோலைன், அலானைன், லைசின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அமினோ அமிலங்களின் செயற்பாட்டை சீராக பேணும்.

5. தூக்கமின்மை பிரச்சினை சரியாகும்

சிலர் மன அழுத்தம், ஆரோக்கிய குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் இருப்பார்கள். இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொழுது மன அழுத்தம் அதிகமாகும், முகத்தில் வாட்டம் இருக்கும் இப்படியான பிரச்சினைகள் வரும்.

தூக்கமின்மை பிரச்சினையில் இருப்பவர்கள் ஆடு கால் சூப் குடிக்கலாம். இதில் உள்ள கிளைசின் என்னும் அமினோ அமிலம், உடலில் உள்ள உணர்வு நரம்புகளை தளர்வடையச் செய்து நிம்மதியான தூக்கத்தை தரும்.

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • ஆட்டுக்கால் – 250 கிராம்
  • மிளகு – 2 மேசைக்கரண்டி
  • தனியா – 2 மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 2
  • சீரகம் – 2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி – 2 அங்குல துண்டு
  • பூண்டு பல் – 3
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் – தேவையான அளவு
  • தாளிக்க கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு

சூப் செய்வது எப்படி?

  • தனியா, மிளகு, சீரகம் ஆகிய மூன்றையும் போட்டு தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
  • இதன் பின்னர் காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி , கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போன்ற பொருட்களை போட்டு ஒன்றாக அரைத்து வைக்கவும்.
  • சூப்பிற்கு தேவையான ஆட்டுக்கால்களை தீயில் போட்டு சுட்டெடுக்கவும்.
  • ஆட்டுகால்களுடன் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும் வரை வேக விடவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அது சூடானதும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதனுடன் வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து கொள்ளவும்.
  • வேகவைத்துள்ள ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை அதனுடன் சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையுடன் மிதமான தீயில் வேக வைக்கவும்.
  • சரியாக பதினைந்து நிமிடங்கள் கொதித்த பின்னர் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Read Previous

2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்த தந்தை.. தாயுடன் எடுத்த விபரீதம்..!!

Read Next

வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினை இல்லாமல் இருக்கனுமா?.. இதை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular