சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீராவின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீராவுக்கும் அவரது நண்பர் விஜய்க்கும் இடையே பணத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய் வீராவின் வீட்டிற்கு சென்று அங்கு நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வெடித்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. சம்பவம் நடைபெற்றபோது வீட்டிற்குள் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வெடிகுண்டு வீச்சுக்கான காரணம், சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பிச் சென்ற விஜயை போலீசார் தேடி வருகின்றனர்.




