Oplus_131072
சமையல் குறிப்புகள்
முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளில் உப்பு அல்லது காரம் அதிகமாகி விட்டதா? கவலை வேண்டாம். ஒரு தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நறுக்கிப் போட்டுக் கொதிக்க வையுங்கள். உப்பு அல்லது காரம் சரியாகிவிடும்.
கடையில் பிரெஷ் ஆக வாங்கி வைத்த கத்தரிக்காய் வாடி வதங்கி விடுகிறதா? கத்தரிக்காயை ஹhட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் பாதுகாக்கலாம்.
உப்பு ஜாடியில் எப்போதும் தண்ணீர் வடிகிறதா? அதனைத் தவிர்க்க சிறு புளித் துண்டை எடுத்து உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் நீர்த்தன்மையை புளி எடுத்து விடும்.
அதிகப்படியாக வாங்கி வைத்திருக்கும் எண்ணெயில் ஒரு சில பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால், எண்ணெய் கசடு தங்குவது நிகழாது.
வெண்டைக்காயை துணியால் சுற்றி அதனை பாலிதீன் கவரில் வைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாது.
வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் டேஸ்ட்டாக இருக்கும்.
நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.
மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில் முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலை போடலாம். கசக்காது. புழு பூச்சி வராது. சுக்குத்தூளும் தூவலாம்.




