பொதுவாக நாம் வாங்கும் காய்கறிகளில் சிலவற்றின் விலை எப்போதும் ஏற்றஇறக்கமாக இருக்கும். இதில் தக்காளி, வெங்காயம் இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக தேங்காயின் விலையும் கூட அவ்வப்போது ஏற்றஇறக்கத்தில் இருக்கும்.
இதனால் தேங்காயின் விலை குறையும்போது அதிகமாக வாங்கி வைத்துக் கொள்வோம். அவ்வாறு நாம் அதிகமாக வாங்கி வைத்துக்கொண்டாலும் சில நாட்களில் அவை அழுகிவிடும். அவ்வாறு அழுகி போகாமல் இருக்க மற்றும் நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்க உங்களுக்காக இங்கே சில டிப்ஸ்கள்…
டிப்ஸ் :-1
தேங்காயினை ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்துக்கொள்ளுங்கள், பின் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும், பின்பு அதனை கேரட் சீவும் பலகையால் சீவி கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலி வைத்து சீவி வைத்துள்ள தேங்காயினை, சேர்த்து ஈரப்பதம் இல்லாத வாறு வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நன்றாக ஆறவைத்து சில்வர் டப்பா அல்லது கண்ணாடி டப்பாவில் இந்த வதக்கிய தேங்காயினை போட்டு மூடி வைக்கவும். உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதினால் தேங்காய் வெகு நாட்கள் கெடாமல் இருக்கும்.
டிப்ஸ் :-2
தேங்காயினை உடைத்து கேஸ் அடுப்பில் வைத்து கொட்டாங்குச்சியின் நிறம் மாறும் வரை சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அந்த தேங்காயினை எடுத்து தண்ணீரில் போட்டு ஆறவைக்கவும். சுட்ட தேங்காய் நன்கு ஆறியதும் அந்த தண்ணீரில் இருந்து எடுத்து அந்த கொட்டாங்குச்சியில் இருந்து தேங்காயை தனியாக பிரித்து, சிறு சிறு துண்டுகளாக கட் செய்து ஒரு டப்பாவில் வைத்து, ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டு உங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது எடுத்து உபயோகிக்கலாம்.
டிப்ஸ் :-3
தேங்காயினை துருவி, மிக்சி ஜாரில் துருவிய தேங்காயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள். பிறகு ஃபிரிட்ஜில் ஐஸ் க்யூப் வைக்கும் ட்ரேயில் இந்த அரைத்த தேங்காய் விழுதை செட் செய்து பிரீஸரில் வைக்கவும். பிறகு உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இதை விலை குறைவாக கிடைக்கும் காலத்தில் அவசரத்திற்கு மட்டும் செய்யவும்.. எப்போதுமே இதை தொடர்ந்தால் செரிமான கோளாறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.




