Oplus_131072
பணியாரம்
பணியாரம், மதுரையில் காலையிலும் மாலையிலும் கிடைக்கக்கூடிய சுவையான பண்டங்களில் ஒன்று. இனிப்பு சேர்த்து செய்யப்படும் பணியாரம், இனிப்பில்லாமல் செய்யப்படும் காரப்பணியாரம் இரண்டும் சாலையோரக் கடைகளிலிருந்து, பெரிய உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. முன்பு பெரியார் பேருந்து நிலையத்தில் பணியாரம் விற்பவர்களிடம் சுடச்சுட ஊருக்கு வாங்கிக்கொண்டு செல்வார்கள். மதுரை ரயில்நிலைய வாசலிலும் இக்காட்சியை நீங்கள் பார்க்கலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பணியாரம் செய்யப்பட்டதைக் குறித்த கல்வெட்டுத்தகவல்கள் உண்டு. தேங்காய், கதலிப்பழம், சீரகம், மிளகு, சுக்கு ஆகியவை கலந்து செய்யப்பட்ட பணியாரம் பற்றிப் பிற்காலப் பாண்டியனான பராக்கிரமனின் கல்வெட்டும், தேங்காயும் கருப்புக்கட்டியும் கலந்து செய்யப்பட்ட திருப்பணியாரம் பற்றி பிற்காலச் சோழர் கல்வெட்டும் கூறுவதாக ஆய்வாளர் அ.கா.பெருமாள் கூறுகிறார்.
காரப்பணியாரத்தையும், சிலர் இனிப்புப் பணியாரத்தையும் சட்னி தொட்டு சாப்பிடுவர். நெய்ப் பணியாரங்களும் சில கடைகளில் உண்டு. பத்துப்பணியாரங்களை வாங்கி ஒரு வேளை உணவை முடித்துக் கொள்பவர்கள் உண்டு. சாலையோரக் கடைகளில் சாம்பார் சட்னியோடு பணியாரத்தைக் குழப்பிச் சாப்பிடுபவர்களை நீங்களும் பார்த்திருக்கலாம். ஏன் அது நீங்களாகவும் இருக்கலாம்.
உங்கள் சுவையான அனுபவங்களைப் பகிருங்களேன்…




