அறிவாளியாய் இருங்கள்…
ஒரு மண்பாண்ட தொழிலாளி தன் வீட்டு வாசலில் பானை புனைந்து கொண்டிருந்தார்.
அவரது வழுக்கை தலையில் ஈ ஒன்று அமர்ந்தது. அவர் தலையை தட்டும் போது பறந்து விடும். மீண்டும் வந்து அமரும். இது அவருக்கு எரிச்சலாக இருந்தது. பானை செய்யும் போது அடிக்கடி கையை எடுக்க வேண்டி வந்ததால், பானையின் உருவம் மாறியது.
அவர் தன் மகனை அழைத்தார்.
“டேய், என் தலையில் இருக்கும் அந்த ஈயை கொன்றுவிடு. அது என்னை துன்பப்படுத்துகிறது” என்றார்.
மகன் தந்தையிடம்,” நீங்கள் அசையாமல் இருங்கள். ஒரே அடியில் அதை கொன்று விடுகிறேன்” என்றான்.
அவரும் அசையாமல் இருந்தார். மகன் ஒரு பெரிய தடியை தூக்கி வந்தான். ஈ இருந்த பகுதியில் ஓங்கி ஒரு அடி அடித்தான். ஈ பறந்து விட்டது . தந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர்.
இந்த கதையிலிருந்து என்ன தெரிய வருகிறது! ஒரு எதிரி நம் எதிரே ஆயுதத்துடன் வந்தால் கூட ஓடியோ போராடியோ தப்பித்துக் கொள்ளலாம் .
ஆனால் முட்டாள்களை பிள்ளைகளாகவோ, நண்பர்களாகவோ பெற்றால் நம் உயிர் தான் போகும்.
இந்த கதையின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் .
பிள்ளைகளை புத்திசாலிகளாக வளருங்கள். புத்திசாலி நண்பர்களை தேர்ந்தெடுங்கள். அதற்கு நீங்களும் அறிவாளியாய் இருக்க வேண்டும்.




