பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் விழுந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து மண்டல் என்பவரின் மகன் சுபம் குமார், தனது தாயாருடன் மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். பின்னர், அவரது மாமா பலகாரம் வாங்கிக் கொடுப்பதற்காக அங்கிருந்த அமன் சா என்பவரின் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, கடையில் இருந்த சிலருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியுள்ளது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் சட்டி அருகே இருந்த இரும்பு கரண்டி மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதனால் கொதிக்கும் எண்ணெய் சிதறி அருகில் நின்றிருந்த சுபம் மீது விழுந்தது. எண்ணெய் பட்ட அதிர்ச்சியில் நிலைதடுமாறிய சிறுவன், அருகில் இருந்த பெரிய எண்ணெய் கொப்பரைக்குள் தவறி விழுந்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து, சுபத்தை மீட்க அவரது மாமா தனது உயிரையும் பொருட்படுத்தாமல் முயற்சி செய்து வெளியே தூக்கியுள்ளார். உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுவனை காப்பாற்ற கடை உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




