மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கல்லூரி மாணவியை தனிப்பட்ட வீடியோ மூலம் மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் சக மாணவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புனே ஆலந்தி சாலையில் வசித்து வரும் 21 வயது மாணவி, கேம்ப் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் முன்பு படித்த முன்னாள் சக மாணவர் ஒருவரிடம் மாணவியின் தனிப்பட்ட வீடியோ இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவை பயன்படுத்தி மாணவியை மிரட்டிய அந்த நபர், தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், பின்னர் அந்த வீடியோவை தனது நண்பர்களிடமும் பகிர்ந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வீடியோவை பெற்ற அவரது மூன்று நண்பர்களும் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மாணவியை மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலை பயன்படுத்தி அவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சமூகத்தில் தனது பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தாலும், தொடர்ந்து வந்த மிரட்டல்களாலும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நீண்ட காலமாக இந்த வேதனையை தாங்கி வந்துள்ளார். பின்னர் தைரியமாக காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்னாள் சக மாணவர் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் என நான்கு பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




