Oplus_131072
பூமி சூரியனைச் சுற்றி தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த தொடர்ச்சியான இயக்கத்தால்தான் நமக்கு பகலும் இரவும் மாறி மாறி வருகிறது. பூமி தனது சுழற்சியை 1 நொடி மட்டும் நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? எப்போதேனும் நினைத்ததுண்டா?
நமக்குத் தெரியாமலே, பூமி மணி நேரத்திற்கு சுமார் 1,600 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. இந்தச் சுழற்சிதான் நம்மை பூமியில் நிலையாக வைத்திருக்கிறது.
பூமத்திய ரேகைக்கு அருகில் பூமி மணி நேரத்திற்கு சுமார் 1,670 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. நியூட்டனின் விதிப்படி, இயக்கத்தில் இருக்கும் எந்தப் பொருளும் அதே இயக்கத்தில் தொடர விரும்பும். அதனால், பூமி திடீரென்று நின்றுவிட்டால், பூமியின் மேல் இருக்கும் மனிதர்கள், விலங்குகள், கட்டிடங்கள், வாகனங்கள், வளிமண்டலத்தில் உள்ள காற்று எல்லாம் அதே 1,670 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கு திசை நோக்கி பறந்து போய்விடும். இது மிக வேகமாக செல்லும் ஏவுகணை போல் எல்லாவற்றையும் அழித்துவிடும்.
பூமி நின்றாலும், கடல்களில் இருக்கும் நீர் திடீரென்று நின்றுவிடாது. அது வேகமாக நகரும். இதனால் கடலில் நூற்றுக்கணக்கான மீட்டர் உயரமுள்ள பெரும் அலைகள் உருவாகும். இது சாதாரண சுனாமியை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது. மும்பை, நியூயார்க், டோக்கியோ, ஷாங்காய் போன்ற கடலோர நகரங்கள் சில நொடிகளில் நீரில் மூழ்கும். கடல் நீர் நிலப்பரப்புக்குள் ஊர்ந்து வருவதால், உலகின் வரைபடமே முற்றிலும் மாறி விடும்.
பூமி நின்றாலும் வளிமண்டல காற்று உடனே நின்றுவிடாது. அது ஒலியின் வேகத்தை விட அதிகமான, மீயொலி வேகத்தில் வீசத் தொடங்கும். அந்த மிக வேகமான காற்று, பூமியில் உள்ள உயரமான கட்டிடங்கள், பாலங்கள், மரங்கள் எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி தூக்கி எறியும். மரங்கள் கூட வேருடன் கிழிந்துபோய் காற்றில் பறக்கும். இதனால் உலகம் முழுவதும் காட்டுத் தீ ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பூமி திடீரென நின்றதால் உருவாகும் அதிர்ச்சி, பூமியின் மேல்தட்டு (crust) மீது மிக அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் பூமிக்குள் உள்ள புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று பலமாக மோதிக் கொள்ளும். இதன் விளைவாக உலகம் முழுவதும் மிக பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும். இதுவரை அமைதியாக இருந்த எரிமலைகளும் ஒரே நேரத்தில் வெடிக்கத் தொடங்கும். பூமியின் காந்தப்புலம் சீர்குலைவதால், சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு நேரடியாக பூமியை அடைந்து, உயிரினங்களுக்கு ஆபத்து உண்டாகும்.
ஒரு நொடி கழித்து பூமி மீண்டும் சுழலத் தொடங்கினாலும், அந்த ஒரே நொடியில் ஏற்பட்ட பேரழிவிலிருந்து மீள்வது மிகவும் கடினம். விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, இப்படிப் பட்ட நிலை ஏற்பட்டால், பூமியில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 85% பேர் உடனடியாக உயிரிழக்கக் கூடும்.சுருக்கமாகச் சொன்னால், பூமி சுழல்வதை நிறுத்தும் அந்தக் கணத்தில், கடல்நீர், கட்டிடங்கள், மரங்கள், மனிதர்கள், விலங்குகள் எல்லாம் மின்னல் வேகத்தில் கிழக்கு நோக்கி தூக்கி எறியப்படும்.
அதனால் உருவாகும் சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவை பூமியின் தோற்றத்தையே மாற்றிவிடக் கூடியவை. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், பூமி திடீரென்று சுழற்சியை நிறுத்திவிடும் சாத்தியம் மிகவும் குறைவு என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.




