தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக குடும்ப தலைவிகளுக்கு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1,000 நிதி உதவி அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதன்பின், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படும்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் 2 நியாய விலை கடைகளை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்துள்ளனர்”. மேலும், “இத்திட்டத்தில் விடுபட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருகின்ற ஜூன் மாதத்திற்குள், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.




