சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கை அருகே பணியாளர்கள் முட்டைகளை வீசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் நிலை எப்போது மாறும் என அவர் விமர்சித்துள்ளார். மேலும், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களை அரசு ஊழியர்கள் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.




