உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காதை பிளக்கும் அளவுக்கு அதிக சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அந்த பைக்கில் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் அடுக்கடுக்காக சுமார் 100 ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், கூடுதல் விளக்குகளும் அமைக்கப்பட்டு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த போலீசார், பைக்கை சோதனை செய்தனர்.
அதிக அளவிலான ஹாரன்கள் மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததால் ஒலி மாசு ஏற்படும் வகையிலும், கடுமையான போக்குவரத்து விதிமீறலாகவும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநருக்கு அபராதம் விதித்ததுடன், இனி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.




