இந்தியாவில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முதல் தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு முக்கிய ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை பொதுமக்களிடம் பயன்படுத்துவதற்கான மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அனுமதி வழங்கியுள்ளது.
டெங்குவை ஏற்படுத்தும் நான்கு வகை வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும் வகையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் நாடு முழுவதும் சுமார் 60 மையங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆய்வுகளின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால், இந்தியாவில் டெங்கு தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வழி விரைவில் உருவாகும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த முன்னேற்றம் பொது சுகாதாரத் துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.



