Oplus_131072
சூரியனுக்கு எல்லா நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். சந்திரன் முழுமையாக ஒளிவீசுவது மாதத்தில் ஒருநாள் மட்டுமே. அதனால் பௌர்ணமியை விசேஷ நாளாகக் கருதுகிறோம். ஆனால், சூரியனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்பதெல்லாம் கிடையாது என்பதால் எல்லா நாட்களும் விசேஷமான நாட்கள்தான். கிரஹண காலங்களில் மட்டும் சூரிய கிரணங்கள் மறைக்கப்படுவதால் அதற்குரிய சாந்தி பரிகாரங்களைச் செய்கிறோம். எல்லா நாட்களிலும் சூரியனை வழிபட இயலாதவர்கள் குறைந்த பட்சம் தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலாவது வழிபட வேண்டும். ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு நாளன்றும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் நுழைவார்.
அதிலும் வழிபட இயலாதவர்கள் உத்தராயண, தக்ஷிணாயண புண்ய காலங்களில் அதாவது தை மாதப் பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு நாட்களிலாவது வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் செய்ய இயலாதவர்கள் பொங்கல் பண்டிகை அன்று சூரிய பூஜை செய்து வழிபடலாம். விசேஷமாக வழிபட இயலாவிட்டாலும், தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் உதய காலத்தில் சூரிய பகவானை தரிசித்து மனதாற வழிபட்டு வந்தாலே போதும். சூரிய வழிபாடு சுறுசுறுப்பைக் கூட்டுவதோடு மனதையும், உடலையும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் என்பதே அனுபவபூர்வமான உண்மை.




