சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்தார்.
விழாவில் பேசிய அவர், “நான் திமுகவின் ‘கட்டப்பா’. திமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அந்த இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பேன்” என்று கூறினார். மேலும், ஆட்சியில் இருப்பதால் மட்டும் ஆதரவு தெரிவிப்பவர் அல்ல என்றும், எதிர்க்கட்சியாக இருந்த காலங்களிலும் திமுகவுக்கு ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சி குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை பெயர் மாற்றலாம்; ஆனால் அவற்றின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் மாற்றக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், திமுக என்பது வெறும் தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவான இயக்கம் அல்ல; சமூக நீதி மற்றும் சமூக சேவையை அடிப்படையாகக் கொண்ட இயக்கம் என்றும் சத்யராஜ் கூறினார். பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றும் தலைமைத்துவமே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனது உரையின் போது மா. சுப்பிரமணியனை தனது தம்பி எனக் குறிப்பிட்டு சத்யராஜ் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.




