மாறிப்போன உறவுகள்..!! அழகான காலங்களை ஞாபகம் படுத்தும் பதிவு இது..!!

Oplus_131072

#மாறிப்போன_உறவுகள்:

முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனால்… “தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?”

“அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் நல்லாருக்கிங்களா..?”

“எல்லா நல்லா இருக்கோம் சாமீ… கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்.. பாப்பா.. மாமாக்கு கை துடைக்க துண்ட எடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்துமா”.

“அத்தை… நா வரும்போது தான் சாப்ட்டுட்டு வந்தேன். என்னால இப்ப சாப்டவெல்லாம் முடியாது. தண்ணி மட்டும் குடுங்க, போதும்..”

“இந்தத் தண்ணிய குடிக்கவா இவ்ளோ தூரம் வந்தே..? பாப்பா.. அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடு. மாமா இப்பிடியே உக்காந்து,
பேசிட்டே சாப்டட்டும். ” (எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல).

அப்டி இப்டி பேசிப் பேசியேயே.. ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க. அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு நாம கிளம்பும் போது… “ஏஞ்சாமீ… இருந்துட்டு சாயங்காலமா போலாம்ல. மத்தியானத்துக்கு மாமன நாட்டுகோழி புடிச்சுட்டு வரச் சொல்றேன்..”

“இல்லத்த.. வேலையிருக்கு. அவசரமா போகணும்..”

“எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தான்… பாத்து மெதுவா போ சாமீ. அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலு நாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். அட, பேசிட்டே மறந்துட்டேன் பாரு, இரு வாரேன்…
(போய்… ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு…) நேத்து சந்தைக்குப் போனேனா.. அங்க வாங்கியாந்தேன். நாங்க மூணு பேரு தான்.
இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டு போய் அம்மாட்ட குடு. பாத்து பத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்த வாரம் வாரேன்னு சொல்லு..”

இப்பெல்லாம் ஒரு சொந்தங்காரங்க வீட்டுக்குப்போனா…

“ஹாய்… வா வா.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். என்ன சாப்பிடுற..? காபி, டீ..? (கேட்டுட்டு உடனே) எங்க வீட்ல நாங்க யாரும் டீ, காபி சாப்பிடுறதில்ல..” (இதுக்கும் மேல, ‘இல்லைங்க.. நாங்க தினம் ஆறு வேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தால்தான் எங்களுக்கு தூக்கம் வரும்’னா சொல்ல முடியும்..?) “ஐயையோ..! நா இன்னேரத்துல டீ, காபி சாப்பிட மாட்டேங்க..”

“அப்புறம்… என்ன விஷயம்..?
(வந்த விஷயத்த சொன்னதும்)
இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே..? போன்லயே சொல்லி இருக்கலாமே…”

“இல்லைங்க… பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்..”

“அதான் தினம் நாலு தடவ,
வாட்ஸ் ஆப், FBல… போட்டோ அப்டேட் பண்றனே…” (கன்னத்துல செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். )

இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல ஹியர் போன மாட்டிட்டு குறுக்க மறுக்க நடந்துட்டு இருப்பாங்க. ஆனா நம்மள ஒரு மனுஷ ஜந்துவா கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி…)

“ப்ரீத்தி… இந்த அங்கிள் யாருன்னு தெரிதா..?” (அது சின்ன வயசுல, நம்ம பாக்கெட்ல கைய விட்டு காச எடுத்து, ஏழு கடல மிட்டாய வாங்கி ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு.. சந்தைல எருமை மாட்ட ஏற இறங்க பாக்குற மாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு…) “நோ மம்மி.. நா பாத்ததே இல்ல. யாரிது..?”னு, வௌக்கு மாத்துலயே நம்மள போடும்.

உடனே அம்மாக்காரி அசடு மாதிரி ஒரு சமாளிப்பு சிரிப்பை சிரிச்சுட்டு…
“அப்புறம்..?”
(இன்னுமாடா கிளம்பல).

“சரிங்க… டைமாச்சு, நா கிளம்பறேன்..”

“ஆமா…
வந்து ரொம்ப நேரமாச்சு.
நானும் வெளிய கிளம்பணும்..”

“இனிமே வரும்போது ஒரு ரிங் பண்ணிட்டு வா. எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்லாம் எப்பவுமே பர்மிஷன் கேட்டுட்டுதான் வருவாங்க… இப்ப போகும்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெரு நாய்லாம் உள்ள வந்துடும்..”

 

Read Previous

சிவப்பு அரளிப்பூவில் இவ்வளவு ரகசியம் இருக்கா?.. இத்தனை நோய்க்கும் மருந்தாக இருக்கிறதா?..

Read Next

காஃபி ( Coffee )என்பது என்ன..?? காஃபி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் என்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular