நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த கடினமான அனுபவங்கள் மற்றும் காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுபமா, சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனநிம்மதியைப் பெற வேண்டுமெனில் பயனற்ற பாதையை விட்டுவிட வேண்டும் என்றும், இனி தனது வாழ்க்கையை தானே தேர்வு செய்யப் போவதாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு அவரது காதல் முறிவை குறித்துதான் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்தப் பதிவு தொடர்பாகவும் தனது காதல் வாழ்க்கை குறித்தும் அனுபமா பேசியுள்ளார்.
இரண்டு ஆண்டுகள் வேதனை
தனது இன்ஸ்டாகிராம் பதிவின் பின்னணி குறித்து பேசிய அனுபமா, அந்தக் காலகட்டத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் உடல் மற்றும் மன ரீதியாக வேதனையை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.
தனது முன்னாள் காதலரின் நடவடிக்கைகள் தன்னை கடுமையான உளவியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நேரத்தில் தன்னை மிகவும் அன்பாக நடத்திவிட்டு, மறுநாளே முற்றிலும் மாறுபட்டு கொடூரமாக நடந்து கொள்வார் என்றும், பின்னர் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பார் என்றும் அனுபமா தெரிவித்துள்ளார். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயத்தில் வாழ்ந்தேன்
ஒரு கட்டத்தில் தான் எப்போதும் பயத்துடனேயே வாழ்ந்ததாக அனுபமா கூறியுள்ளார். ஒரு விஷயத்தை அவரிடம் கூறினால் அவர் எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதை நினைத்து, முன்கூட்டியே ஒத்திகை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை சென்றதாக தெரிவித்துள்ளார்.
தனது திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கறை போல தொடங்கி ஆதிக்கமாக மாறியது
தன் மீது நம்பிக்கை வைத்து, தனது தனிப்பட்ட வலிகளை காதலரிடம் பகிர்ந்து கொண்டதாக அனுபமா கூறியுள்ளார். ஆரம்பத்தில் அந்த அணுகுமுறை அக்கறையாகவே தெரிந்ததாகவும், பின்னர் அது தன் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதைக் கூட அவரே தீர்மானித்ததாகவும், தன்னுடைய விருப்பங்கள் மற்றும் முடிவுகளில் கூட தலையிடத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் வரை சென்ற பேச்சு
காதல் தொடங்கிய சில மாதங்களிலேயே தனது குடும்பத்தினரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதாக அனுபமா தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினர் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் குறித்து பேசத் தொடங்கியதாகவும், அந்த நேரத்தில் தான் நிச்சயதார்த்தத்தை தள்ளிப்போட்டதாகவும் கூறியுள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கையில் சந்தித்ததாக கூறிய இந்த அனுபவங்கள் குறித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.




