திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், அவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் (40), மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி ரம்யா (35) உடன் அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த குமார் மீண்டும் தகராறு செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளால் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர்களது 3 குழந்தைகளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இரவு முழுவதும் கணவரின் உடல் அருகே இருந்த ரம்யா, அதிகாலையில் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததை தெரிவித்து சரணடைந்தார்.
கணவர் தொடர்ந்து மதுபோதையில் தகராறு செய்து வந்ததால் மனஉளைச்சலில் இருந்ததாகவும், சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரம்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் எழுந்த குழந்தைகள் தந்தை உயிரிழந்ததை அறிந்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




