செங்குன்றம் பகுதியில் உறவினரின் மனைவியுடன் ஏற்பட்ட முறையற்ற தொடர்பு காரணமாக 40 வயது எலக்ட்ரீஷியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலமுருகன் நகரைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன், மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது மைத்துனர் சரவணனின் மனைவியுடன் ரத்தினவேலுக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது முறையற்ற உறவாக மாறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த சரவணன் பலமுறை ரத்தினவேலை எச்சரித்தும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தனது சகோதரர் தனசேகர் மற்றும் உறவினர் பழனிசாமியுடன் சேர்ந்து ரத்தினவேலை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
அப்போது அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த ரத்தினவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன், தனசேகர், பழனிசாமி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.




